மதுரை: நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் இழந்திருக்கிறோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதனை கறுப்புப்பண ஒழிப்பு நாளாக பாஜக கொண்டாடி வருகிறது. அதேநேரத்தில் இந்த நாளை கறுப்பு நாளாக எதிர்க்கட்சிகள் அனுசரித்து வருகின்றன. இதனை முன்னிட்டு திமுகவினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் மக்கள் பெருந்துயரமடைந்தனர் என குற்றம் சாட்டினார். நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் இழந்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஏஎடிம் முன்பு கால்கடுக்க மக்கள் நின்ற அவலம் நடந்தது என்றும் அப்போது ஏராளமான மக்கள் மயக்கமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.
ஏடிஎம் வாசல்களில் 100க்கும் அதிகமானோர் மாண்டு போயினர் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அடிப்படை தேவைகளுக்காக கூட வங்கிகளுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். நவம்பர் 8 ஆம் தேதி வேதனை நிறைந்த நாள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பணமதிப்பிழப்பால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்காமல் திடீரென மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பணமதிப்பிழப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதித்துள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் கருணாநிதியை சந்தித்தார் என்றும் அவர் கூறினார். மேலும் கருணாநிதியை தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்காமாறு மோடி அழைத்தது உண்மை தான் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.