சென்னை: தமிழகம் வரும் போதெல்லாம் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்திப்பார் மோடி. இம்முறை சென்னை வந்துள்ள மோடி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பாஜகவிற்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. அதிமுக, திமுக என இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது பாஜக. மத்தியில் மோடி பிரதமரான பின்னர் திமுக உடனான தொடர்பு உருவாகவில்லை. காரணம் ஜெயலலிதா உடன் மோடி பாராட்டிய நட்புதான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. இந்த சூழ்நிலையில் வயது முதிர்வினால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கே சென்று சந்திக்கிறார் மோடி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி இடையேயான நட்பு நீண்டகாலமாகவே உள்ளது என்றாலும் 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மோடியா? லேடியா என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 2015ஆம் முதல் முறையாக சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடியை வரவேற்றார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
ஆகஸ்ட் 7, 2015ல் சென்னை பல்கலைக் கழகத்தில் கைத்தறி தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேராக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை இருகரம் கூப்பி வரவேற்று சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். ஜெயலலிதா இல்லத்தில் பிரதமர் மோடிக்கு மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு பூங்கொத்து கொடுத்து வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த சந்திப்பையும், போயஸ் கார்டனில் மோடி விருந்து சாப்பிட்டதையும் தவறாக சித்தரித்து பேசினர் காங்கிரஸ் கட்சியினர். பாஜக மற்றும் அதிமுக நடுவே கள்ள உறவு உள்ளது என்றெல்லாம் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்தை கடுமையாக எதிர்க்கிறது திமுக. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள கருப்பு தின போராட்டத்திலும் பங்கேற்கிறது திமுக. திமுக சார்பில் கொண்டாடப்பட்ட எந்த விழாவிற்குமோ பாஜகவிற்கு அழைப்பு விடுப்பதில்லை.
அரசியல் ரீதியாக எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சட்டசபை பொன்விழா நாயகர், வயதில் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார் பிரதமர் மோடி. 2015ல் போயஸ்கார்டன் சென்ற மோடி, 2017ல் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்துள்ளார். இது மிக முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது. மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழிசை அடிக்கடி கூறி வந்தார். அதிமுக இரு அணிகளிடையே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் மோடி என்றெல்லாம் விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். இந்த சூழ்நிலையில் கோபாலபுரத்திற்கு மோடியின் வருகை காங்கிரஸ் கட்சியினரின் வயிற்றில் புளியை கரைக்கத்தான் செய்யும்.