சென்னை: தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தா பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
தினத்தந்தி பவளவிழா, பொருளாதார ஆலோசகர் சோமநாதன் மகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பின்னர் நண்பகல் 12.10 மணியளவில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலாலும் கோபாலபுரம் வந்தார். பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். இச்சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. இதனையடுத்து கருணாநிதியின் இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.