சென்னை: ரஜினிக்கு தமிழக மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறை சர்வே முடிவு கூறுவதாக ஒரு தகவல் கிளம்பியுளளது.
இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறிகையில், "தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மைதான்.
இந்தக் கருத்துக் கணிப்பு, மக்களின் மனதை முழுமையாக அறிந்து கொள்ள உதவும். இந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் அதிமுக அரசு மீது, முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இனியொரு முறை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதற்காக தி.மு.க., மீதும், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. 46 சதவீதம் பேர் மட்டுமே, தி.மு.க.,வை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், பிரபலமாக இருந்து அரசியலுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 32 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதில் கமலுக்கு 4 சதவீதம் பேரும்; நடிகர் விஜய்க்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எடுத்த எடுப்பிலேயே நடிகர் ரஜினி, 19 சதவீதம் பேர் இருப்பதுதான் இந்த சர்வேயின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. சரியான கூட்டாளிகளுடன், நேர்மையான தலைவர்களுடன் களமிறங்கினால் அவர் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு வெறும் 6 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. அந்தக் கட்சி மீது கடும் வெறுப்பலை நிலவுகிறது தமிழகத்தில்," என்றனர்.
இந்த சர்வே முடிவு சரியானதுதானா? உண்மையில் மக்கள் மன நிலை என்ன என்பதை அறிந்து சொல்லுமாறு மாநில உளவுத் துறைக்கு கட்டளை பறந்திருக்கிறதாம் கோட்டையிலிருந்து.