சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களகா வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நீடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என்றார்.
சென்னையை பொறுத்தவரை மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதிகளவாக சீர்காழியில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.