சென்னை: என் கதையைத் திருடி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார் சந்தானம் என்று குற்றம்சாட்டியுள்ளார் உதவி இயக்குநர் நவீன் சுந்தர் என்பவர்.
காமெடி நடிகர் சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சீனிவாசன் மற்றும் விசாகா நடித்துள்ளனர்.
இந்தக் கதை தன்னுடையது என சொந்தம் கொண்டாடியுள்ளார் நவீன் சுந்தர். இவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் 20 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இயக்குனர்கள் மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, ரவிச்சந்திரன் போன்றோரிடம் பணியாற்றி உள்ளேன்.
இரண்டு வருடத்துக்கு முன்பு தனியாக இயக்குவதற்கு 'அன்புள்ள சிம்பு' என்ற தலைப்பில் கதையை தயார் செய்தேன். அந்த கதையை இயக்குனர் ஸ்ரீநாத்திடம் சொன்னேன்.
சந்தானம் நாயகனாகவும், சிம்பு கவுரவ வேடத்திலும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றேன். இதையடுத்து சந்தானத்திடம் கதை சொல்ல ஸ்ரீநாத் என்னை அனுப்பி வைத்தார். கதையை கேட்ட சந்தானம் நன்றாக உள்ளது என்றார்.
சிம்புவிடம் கால்ஷீட் வாங்கிய பிறகு படத்தை எடுக்கலாம் என்றார். ஆனால் இப்போது அதே கதையை "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற பெயரில் படமாக எடுப்பதை டிரெய்லர் மூலம் அறிந்து அதிர்ச்சியானேன். இது குறித்து சந்தானத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது மானேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டு என்னை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
சந்தானத்தை சந்திக்க முடியவில்லை. சந்தானம் மனசாட்சி ரீதியாக எனக்கு நியாயம் தராவிட்டால் அவருக்கு எதிராக உண்ணா விரதம் இருப்பேன். தற்கொலைக்கும் முயற்சி செய்ய வேண்டி வரும். சினிமாவை நம்பி நிறைய இழந்து விட்டேன். இதையும் இழக்க விடமாட்டேன்," என்றார்.