ஸ்ரீரங்கம்: உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாகத் தாக்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேலும் இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசுகையில்,
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப் பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு, உங்களிடையே உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
என் மீதும், எனது அரசு மீதும் நீங்கள் பொழியும் பாசத்தை, நீங்கள் வைத்திருக்கும் அன்பை, அளவு கடந்த நம்பிக்கையை உங்கள் முகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இது ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் மூன்றாவது அரசு விழா. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியும் என்னுடைய தொகுதி தான் என்றாலும், இது என்னுடைய சொந்தத் தொகுதி. நான் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம் எல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றித்தான்.
என்னை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவர்கள் நீங்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமை, நன்றிக் கடன் என கருதுகிறேன். ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா ஒரு குட்டிக் கதையைக் கூறினார்.
பெரு வணிகர் ஒருவரும், சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், பெரு வணிகர் விரோதம் கொண்டு சிறு வணிகர் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை வாதாட சிறு வணிகர் தனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரைக் காணச் சென்றார்.
ஆனால் அந்த வழக்கறிஞரோ, இந்த வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை. எனினும், சிறு வணிகர் வழக்கறிஞரை தொடர்ந்து சந்தித்து, வழக்குத் தொடர்வது குறித்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வழக்கறிஞரும் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்து நீதிமன்றத்தில் பெரு வணிகர் போட்ட வழக்கை எடுத்து வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிந்து சிறு வணிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உடனே வழக்கறிஞரை சந்தித்து நன்றியோ, பாராட்டோ தெரிவிக்காத சிறு வணிகர், எல்லோரிடமும், இந்த வழக்கில், தனக்கு சாதகமான விஷயங்கள் இருந்ததால், இயல்பாகவே வழக்கின் முடிவு வெற்றியாக அமைந்துள்ளது. இதில் வழக்கறிஞரின் வாதச் சிறப்பு ஏதும் இல்லை. வழக்கு வெற்றிகரமாக முடியும் என்று தெரிந்துதான் இவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார் என்று அவதூறாக பேசி வந்தார்.
இந்த சிறு வணிகர் நிறுத்திலும், உள்ளத்திலும் கருப்பானவர். இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசுவார்கள் என்றார் ஜெயலலிதா.
இது தேமுதிக தலைவர் விஜய்காந்தை குறி வைத்து சொல்லப்பட்ட கதை என்பதை சொல்லவும் வேண்டுமா?!