லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்ற தயாராக இருப்பதாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர்(37). வேகபந்துவீச்சு மூலம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் பெற்ற அக்தர், எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைத்தவர்.
ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர், பாகிஸ்தான் அணியில் இருந்து அவ்வப்போது நீக்கப்பட்டார். மேலும் காயம் காரணமாக பாதிக்கப்பட்ட அக்தர், கடந்த ஆண்டு உலக கோப்பை தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளர் இல்லாமல் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவி செய்ய அக்தர் முன்வந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்ற நான் தயாராக உள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் பணியை சிறப்பாக செய்வேன்.
நாட்டின் அணிக்காக பணியாற்றுவதன் மூலம் இளம்பந்துவீச்சாளர்களை உருவாக்குவது ஒரு பெருமையான செயலாகும். பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவதன் மூலம் எனது நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பந்துவீச்சாளர்கள் உமர்குல் மற்றும் பிரெட் லீ ஆகியோர் இல்லாதது பெரும் இழப்பாக கருதுகிறேன். இரு அணிகளிலும் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும், ஒருநாள் தொடர் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தொடரில் பந்துவீச்சாளர்களின் பணி முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.