டெல்லி: ஊழல், கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். பழை ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்களுடன் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் தபால் நிலையங்கள், வங்கிகள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடினர். மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கறுப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் கறுப்புப்பணத்துக்கு எதிரான 125 கோடி மக்கள் மேற்கொண்ட போருக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி பொருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கறுப்புப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை குறித்த தங்களது கருத்துகளை NM App இல் தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.